JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, August 11, 2020

அரசுப் பள்ளிகளில் 1,6,9ஆம் வகுப்புகளுக்கு வரும் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்




அனைத்து பள்ளிகளிலும் 2021 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 17 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாகவும், தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அனைத்து வகை பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பு, மற்றும் 9 ஆம் வகுப்புகளில் வரும் 17 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவித்தார்.

மாணவர் சேர்க்கையின் போது, சமூக இடைவெளி பின்பற்றுவது குறித்து தமிழக அரசால் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை தவறாது பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதே போல் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாறும் மாணவர்களுக்கான சேர்க்கையும் 17 ஆம் தேதி முதல் நடைபெறும்.

அனைத்து மேல்நிலை பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 24 ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே விலையில்லா பாடபுத்தககங்கள்/ நோட்டு புத்தகங்கள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி வழங்கப்படிம் என அறிவித்தார்.

மேலும், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009இன் படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி/ ஒன்றாம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை செய்திட இணையதளத்தின் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பம் செய்திட மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எவ்வித குளறுபடியும் இல்லை எனவும் முறையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்து,கொரோனா பாதிப்புகள் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்தார்.

No comments:

Post a Comment