சென்னை: பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது. மார்ச் மாத இறுதியில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் சுமார் ஐந்து மாதங்களாக தொடர்கிறது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது எப்போது என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிப்பு குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இருப்பினும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை உலர் உணவுத் திட்டத்தை தொடர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது. மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி 100 கிராம் , பருப்பு 40 கிராமும், உயர்கல்வி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி 150 கிராமும், பருப்பு 56 கிராமும் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment