Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 1, 2020

பெற்றோர் குவிந்ததால் சிவகங்கை நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில் கூடுதலாக 200 இடங்கள்: நாளை(01.09.2020) முதல் மாணவர் சேர்க்கை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிப் பள்ளியில் 6-ம் வகுப்பில் விண்ணப்பித்த மாணவர்கள் பலருக்கும் இடம் கிடைக்காததால், கூடுதலாக 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி 2013-2014-ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அப்போது 6 ஆசிரியர்களும், 218 மாணவர்களும் இருந்தனர். தலைமை ஆசிரியர் ஆ. பீட்டர்ராஜா முயற்சியால் தனியார் பள்ளிகளைப் போன்று சீருடை, டை, ஷூ அணியும் முறை இங்கு கொண்டு வரப்பட்டது. இது பெற்றோரிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

2014- 2015-ம் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டதில் இருந்தே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. இதனால் மாணவர் எண்ணிக்கையும் படிப் படியாக உயர்ந்தது.

கடந்த ஆண்டே 1,325 மாணவர்கள் படித்தனர். கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர் சேர்க்கை ஆக.17-ம் தேதி நடந்தது. 200 இடங்களே உள்ள 6-ம் வகுப்பிற்கு 700 பேர் இடம் கேட்டு குவிந்தனர்.

இதனால் சில மணி நேரத்திலேயே மாணவர்கள் சேர்க்கை முடிந்ததால், பலரும் தங்களது குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதையடுத்து 6-ம் வகுப்பில் கூடுதலாக 200 மாணவர்களை சேர்க்கவும், கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டவும் கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் இன்று முதல் அப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

No comments:

Post a Comment