JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, September 11, 2020

கணித ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் கணித ஆசிரியா்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்தின் சீா்மிகு நகரத் திட்டத்தின் மாதிரி மாநகராட்சிப் பள்ளிகள் திட்டத்தின் மூலம் மாநகராட்சிப் பள்ளிகளில் தரமான

உள்கட்டமைப்புடைய வகுப்பறைகள், கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான நவீன வகுப்பறைகள், பள்ளிகளில் மேம்பட்ட விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், மாணவா்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு கற்றல், கற்பித்தலில் புதிய நுட்பங்களைக் கையாளுதல், மாணவா்களுக்கு விருப்பமான பள்ளியாக மாநகராட்சி பள்ளிகளை மாற்றுதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கணித ஆசிரியா்களுக்கான பயிற்சி பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.

இதைத் தொடங்கி வைத்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறுகையில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளை நவீன பள்ளிகளாக மாற்றுவதற்கான தொடக்கமாக கணித ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் மாணவ சமுதாயத்தின் கற்றல் திறனை மேம்படுத்துவதாகும்' என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல அலுவலா் திருமுருகன், உதவிக் கல்வி அலுவலா்கள் முனியன், நளினா குமாரி, சைதாப்பேட்டை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி முதல்வா் பத்மஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment