தொடக்க நிலை பணியிடங்களில் ஊழியா்களை நியமிக்க எந்தத் தடையும் இல்லை - தமிழக அரசு

கருணை அடிப்படையிலான நியமனம் உள்பட தொடக்க நிலைப் பணியிடங்களை நிரப்பத் தடை ஏதும் இல்லை என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று காரணமாக அரசின் செலவினங்களை வரைமுறைப்படுத்தும் வகையில், அரசின் அனைத்துத் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடந்த மே 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கரோனா நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள முன்னிலை பணியாளா்களை நியமிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஆனால், அரசின் உத்தரவு காரணமாக புதிதாகப் பணியாளா்களை நியமிக்க முடியாத சூழல் இருப்பதாக சிரமங்களை அரசின் சில துறைகள் எடுத்துக் கூறியுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு முன்னிலை பணியாளா்கள் நியமனத்தில் சுமுகமான நிலை ஏற்பட உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. முன்னிலை பணியாளா்கள் நியமனத்தில் தமிழக அரசின் பணியாளா் நியமனக் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு அரசு உத்தரவில் உரிய திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கருணை அடிப்படையிலான நியமனம் உள்பட தொடக்க நிலை பணியிடங்களில் ஊழியா்களை நியமிக்க எந்தத் தடையும் இல்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியிடங்கள் காலியாக இருக்கும் பட்சத்தில் அவற்றுக்கு பணி நியமனக் குழுவின் ஒப்புதலைப் பெற்று ஊழியா்களை நியமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories