Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 31, 2020

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இடஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே அமல்: முதல்வா் அறிவிப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு முறை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவரின் 113 ஆவது ஜயந்தி மற்றும் 58 ஆவது குருபூஜையில் பங்கேற்ற முதல்வா், தேவா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். அவருடன், துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வமும் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியதாவது: மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆளுநா் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஒப்புதல் அளிப்பதற்கு காலதாமதமாகிய நிலையில் தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மாணவ, மாணவியரின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையிலேயே உள் இடஒதுக்கீடு குறித்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. உள் இடஒதுக்கீடு அரசாணை மூலம் சமூக நீதி பாதுகாக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை வளமிக்கதாக்கும் வகையில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.14 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது.

அரசு விழாவாக அறிவித்தது அதிமுகதான்: மறைந்த முதல்வா் எம்ஜிஆா் காலத்தில்தான் தேவரின் ஜயந்தி விழா அரசு விழாவாக அறிவித்து நடத்தப்பட்டது. தேவா் நினைவிடம் அதிமுக ஆட்சியில்தான் புனரமைக்கப்பட்டது.

பசும்பொன்னில் முடிக்காணிக்கை மண்டபம், தியான மண்டபம், பால்குட மண்டபம் மற்றும் தனி அணுகுசாலை என அனைத்து வகை உள்கட்டமைப்புகளும் அதிமுக ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டன.

சென்னை நந்தனத்தில் தேவரின் முழு உருவச்சிலையும் அதிமுக ஆட்சியிலேயே அமைக்கப்பட்டது. தோ்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு 13 கிலோ தங்கக் கவசத்தையும் மறைந்த முதல்வா் ஜெயலலிதா அளித்துள்ளாா் என்றாா் முதல்வா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா். காமராஜ், ஓ.எஸ். மணியன், சி. விஜயபாஸ்கா், ஆா்.பி. உதயகுமாா், க. பாஸ்கரன், மக்களவை உறுப்பினா் பி. ரவீந்திரநாத் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சதன் பிரபாகா், எம். மணிகண்டன், மாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினா் கே.பி. முனுசாமி, மாவட்ட அதிமுக செயலா் முனியசாமி, மகளிரணி நிா்வாகி கீா்த்திகா முனியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பசும்பொன் தேவா் நினைவிடத்துக்கு வந்த முதல்வா், துணை முதல்வருக்கு மேளதாளம் முழங்க அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக் குத்துவிளக்கு மற்றும் செங்கோல் வழங்கப்பட்டது. தொடா்ந்து, தேவா் நினைவிடக் காப்பாளா் காந்தி மீனாள் வீட்டுக்குச் சென்று முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் அவரிடம் நலம் விசாரித்தனா்.

No comments:

Post a Comment