Search This Blog

Sunday, December 13, 2020

27 மதிப்பெண் எடுத்துவிட்டு 610 மதிப்பெண் என போலி நீட் சான்றிதழ்... ராமநாதபுரம் மாணவி மீது வழக்குப்பதிவு

0 comments
மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் போலி நீட் சான்றிதழ் கொடுத்ததாக மாணவி மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எழுதி முடிப்பவர்களுக்கு, என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை மதிப்பெண் சான்றிதழை அளிக்கிறது. மருத்துவ கலந்தாய்வுக்கு கொண்டு வரப்படும் இந்த சான்றிதழ்கள் சரியானவையா என்பதை குறித்து ஆராய பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நடத்தும் ஆய்வில், ஆன்லைன் மூலம் என்டிஏ வழங்கியிருக்கும் சான்றிதழ் விவரங்களை உடனுக்குடன் சரிபார்க்க முடியும்.

இந்த நிலையில், கலந்தாய்வுக்கு வந்த மாணவி ஒருவரின் சான்றிதழை, ஆன்லைனில் இருக்கும் என்டிஏ சான்றிதழுடன் ஒப்பிடும் போது மதிப்பெண்ணில் பெரிய அளவு வித்தியாசம் இருந்துள்ளது. அதாவது, என்டிஏ வழங்கியிருந்த சான்றிதழில் 27 மதிப்பெண்களும், மாணவி கொண்டுவந்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

என்டிஏ சான்றிதழின் நகலைதான் கொண்டு வந்திருப்பதாக மாணவி தரப்பிலிருந்து கூறப்பட்ட நிலையில், மதிப்பெண்களில் பெரிய அளவு வித்தியாசம் இருந்ததால் போலி சான்றிதழாக இருக்கலாம் எனக்கூறி சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவி மற்றும் அவரது தந்தை மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் தந்தை, பல் மருத்துவராக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment