Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 17, 2020

சனிப் பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

கவர்ச்சிகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் அனைவரையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்கள். சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்கள். கடினமான காரியங்களையும் திட்டமிட்டு வெற்றியாக பணப்புழக்கம் தங்களிடம் முடியும் சக்தி கொண்டவர்களே, நீங்கள் மிகவும் மன உறுதி உடையவர். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள். 


கிரகநிலை:

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்பொழுது பாக்கிய ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய சனிபகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்களுடைய ராசிக்கு லாபஸ்தானம் - ஏழாம் பார்வை உங்களுடைய தைரிய வீர்ய ஸ்தானம் - பத்தாம் பார்வையாக உங்களுடைய ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:

குரு பகவான் பாக்கிய ஸ்தானமான மகர ராசியில் இருக்கிறார். ராகு பகவான் ராசியிலும் - கேது பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த சனிப் பெயர்ச்சியில் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். சிலருக்கு தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். பல சாதகமான நிலைமைகளும் கண் சிமிட்டுகின்றன. சனி பகவான் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள்.

நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய பெயர்ச்சி இது. 

அனைத்துச் செயல்களிலும் சந்தோஷத்தோடு ஈடுபடுவீர்கள். மற்றபடி பெரும்பாலான ரிஷப ராசி அன்பர்களுக்கு உடல் பொலிவடையும். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள். உங்களின் ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்களுக்கு மனப் பக்குவத்தையும் தருவார். எனவே அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். 

குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும் பெயர்ச்சியாக இது அமைகிறது. இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் காண்பீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும். 

வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். 

அரசியல்துறையினரைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். 

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். 

பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும். 

மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

ரோகிணி:

இந்த சனிப் பெயர்ச்சியால் குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. 

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:

இந்த சனி கிரக பெயர்ச்சியால் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் இருக்கும் ஆண்டாளை வழிபட மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். தொழில் மாற்றம் ஏற்படும். 
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும். 
அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு, சுக்கிரன்

க்கம்: ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் 

No comments:

Post a Comment