Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 13, 2021

தகவல்களை பரிமாற மாட்டோம்: வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்!

'வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்களை, யாருக்கும் பரிமாற மாட்டோம்' என, அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

உலகில் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தை, 'பேஸ்புக்' என்ற சமூக வலைதளம் கையகப்படுத்தியது.

'டெலிகிராம், சிக்னல்'

வாட்ஸ் ஆப் நிறுவனம், பயனாளர் தகவல்களை ரகசியமாக வைத்திருக்கும், 'பிரைவசி' கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது.அதில், 'பயனாளிகளின் தகவல்களை, தன் தாய் நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

வரும், பிப்., 8ம் தேதிக்குள், இந்த கட்டாய கொள்கையை ஏற்காத பட்சத்தில், வாட்ஸ் ஆப் சேவையைத் தொடர முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.இது, உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தக் கொள்கையை ஏற்க மறுத்து, மாற்று சமூக வலை தளங்களான, 'டெலிகிராம், சிக்னல்' போன்றவற்றுக்கு பலர் மாறி வருகின்றனர்.

நம் நாட்டில் மட்டும், 40 கோடி பேர், வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பலர், மாற்றுத் தளங்களுக்கு மாறுவதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம், தன் புதிய கொள்கை குறித்து விளக்கம் அளித்துள்ளது; அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

பயனாளிகள் அனுப்பும் தகவல்கள் அல்லது அழைப்புகளை, வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பார்க்கவோ, கேட்கவோ முடியாது; அவற்றை கண்காணிக்கவும் முடியாது.அந்தத் தகவல்களை, அனுப்புபவர் மற்றும் பெறுபவர் மட்டுமே பார்க்கக் கூடிய பாதுகாப்பு அம்சம் தொடர்கிறது; அதில், எந்த மாற்றமும் இல்லை.

அதேபோல், பயனாளிகள், தாங்கள் இருக்கும் இடம் குறித்து பகிர்ந்து கொள்ளும் வரைபடங்களையும், வாட்ஸ் ஆப் நிறுவனம் பார்க்க முடியாது. வாட்ஸ் ஆப் பயனாளிகளின் தொலைபேசியில் உள்ள தொடர்புகள் குறித்த விபரங்களை, பேஸ்புக் நிறுவனத்துக்கு பகிர்ந்து கொள்ள மாட்டோம்.

உண்மை இல்லை

வாட்ஸ் ஆப், 'குரூப்'கள் தொடர்ந்து தனியாகவே செயல்படலாம். அதில், எந்த மாற்றமும் இல்லை. பயனாளிகள் விரும்பினால், தங்களுடைய தகவல்களை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, மறைந்து போகும் வசதியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

பயனாளிகள் குறித்த விபரங்களை, விளம்பரம் வெளியிடுவதற்காக, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளதாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.பயனாளிகள் விருப்பப்பட்டால், தங்கள் தொடர்பில் உள்ள எண்களுக்கு விளம்பரங்களை அனுப்பும் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், அந்த தொடர்பில் உள்ளவர்களின் எண்களை, வாட்ஸ் ஆப் அல்லது பேஸ்புக், தங்களுடைய பிற சேவைகளுக்காக பயன்படுத்தாது; பகிர்ந்து கொள்ளாது.நிறுவனங்களின் விளம்பரங்களை பார்க்க, அதன் பொருட்கள் குறித்த விபரங்களை, வாட்ஸ் ஆப் மூலமாக அறிந்து கொள்ள வாய்ப்பு அளிப்பதே, புதிய கொள்கையின் நோக்கம். இதை, சுயவிருப்பத்தின் அடிப்படையில், பயனாளிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment