Thamizhkadal WhatsApp Channel

அரசு பள்ளி ஆசிரியரை காலில் விழ சொல்லி மன்னிப்பு கேட்கச் சொன்ன கொடூரம்! - காவல் நடவடிக்கை எடுக்குமா?

கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்கச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பல மாதங்களாக மாணவர்கள் வீட்டில் முடங்கி கிடந்தனர். இதனையடுத்து, மாணவர்களுக்கு கல்வி தடை படாமல் இருக்க ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இதற்கு மத்தியில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19 -ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டையில் வசித்து வரும் வேல்முருகன் என்பவர், நெடுமானூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.



இந்நிலையில், பொங்கல் பண்டிகை அன்று இவரது வீட்டிற்கு முன்பாக மண் கொட்டி வைத்து இருந்ததாக சொல்லப்படுகிறது. அதை அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உடனே அகற்றுமாறு கூறியுள்ளனர். இதில் ஆசிரியர் வேல்முருகனுக்கும், அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த கும்பல் ஆசிரியரை தாக்கி, தெருவுக்கு அழைத்து வந்து ஊர் பெரியவர்களின் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்ததுள்ளது.

இதில் மனம் உடைந்த ஆசிரியர் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த அவரது மனைவி இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories