நம்முடைய வாழ்வில் மிக இன்றியமையாத முக்கிய விழாக்களில் ஒன்று முன்னோர்கள் வழிபாடு. மாதா மாதம் வரும் அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி - புரட்டாசி - தை மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானதாகும்.
சூரியனுடைய பாதை 6 மாதத்திற்கு ஒரு முறை மாறும். இதில் வடக்கு பயண பாதை தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலமாகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தக்ஷிணாயன புண்ணிய காலமாகும். அதாவது தெற்கு பயண பாதையாகும். இதில் தை மாத அமாவாசை மிக சிறப்பு வாய்ந்த முன்னோர்கள் வழிபாடு செய்ய வேண்டிய பல்வேறு அற்புதங்கள் நிரம்பிய நாளாகும்.
அமாவாசை சிறப்பு: அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கக்கூடிய விரத நாளாகும். அமாவாசை தினத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கக் கூடிய மிகச் சிறந்த நாள்.
ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை என 12 அமாவாசைகள் ஒரு வருடத்தில் வருகிறது. இதில் ஆடி அமாவாசை, மகாளயம் அமாவாசை, தை அமாவாசை மிக மிக விசேஷமாக விரதம் கடைப்பிடிப்பது வழக்கம்.
பித்ரு தர்ப்பணம் என்றால் என்ன? நம் முன்னோர் இருக்கும் போது நம்முடன் இருந்து நம்மை செம்மைப்படுத்தவும், நல்லறிவு கொடுப்பதும் வழக்கம். அவர்கள் மறைவுக்கு பின்னர் பித்ரு லோகத்தில் இருந்து நம் வாழ்வுக்குச் சகல அருளையும் வழங்கக்கூடிய நிலையை அடைவார்கள்.
ஏன் முன்னோர்களை வணங்க வேண்டும் :
ஒருவன் தான் பெற்றோர் - குல தெய்வம் - முன்னோர்களையும் வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றி பெற முடியும். அப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த நம் முன்னோர்களை ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசை தினங்களில் மிக சிறப்பாக தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த அமாவாசை தினத்தில் சகல ஜீவராசிகளுக்கும் உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் இடையே உள்ள வேறுபாடுகள்:
தர்ப்பணம் என்பது தந்தையார் இல்லாதவர்கள் மட்டுமே செய்ய முடியும். மற்றவர்கள் தானம் கொடுக்கலாம். ஸ்ரார்த்தம் என்பது நம் வீட்டில் இறந்தவர்கள் இறந்த திதி அன்று செய்ய வேண்டியது. இறந்த தேதி அன்று அல்ல - இறந்த திதி அன்று செய்ய வேண்டியது.
தானம் அளித்தல்:
இந்த அமாவாசை தினத்தின் போது அரிசி - பருப்பு - தாம்பூலம் - ஆடைகள் ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிட்டும்.
தை அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும் ?
தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அப்படி நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சென்று விடலாம்.
அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?:
அமாவாசை அன்று யார் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். ஆனால் தர்ப்பணம் என்பது தந்தையார் இல்லாதவர்கள் மட்டுமே செய்ய முடியும். மற்றவர்கள் முன்னோர்களை வணங்கி தானம் செய்தால் போதுமானது.
தை அமாவாசை 2021 எப்போது?
2021ல் தை அமாவாசை தை 29ம் தேதி அதாவது நாளை பிப்ரவரி 11ஆம் தேதி வருகின்றது. பிப்ரவரி 10ஆம் தேதி நள்ளிரவு 1.29 மணிக்கு அமாவாசை திதி தொடங்குகிறது. பிப்ரவரி 11ஆம் தேதி நள்ளிரவு 1.1 மணி வரை அமாவாசை திதி உள்ளது. அதனால் பிப்ரவரி 11 முழுவதும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கலாம். அவர்களை வழிபடவும் மிகச்சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது.
வழிபாட்டுக்கான சிறந்த நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 வரை
No comments:
Post a Comment