10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு! மாணவர்கள் அதிர்ச்சி!

விட்டாச்சு லீவு என்று ஹாயாக இருந்த மாணவர்களின் எண்ணத்தில் மீண்டும் கல்லெறிந்திருக்கிறது தமிழக அரசு. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணத்தினால், இந்த கல்வியாண்டு முழுக்கவே மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பயின்று வந்தனர். பின்னர் கொரோனா தொற்று குறையத் துவங்கியதும் 9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜனவரியில் 10, 12ம் வகுப்பிற்கும், பிப்ரவரியில் 9 மற்றும் 11ம் வகுப்பிற்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் 10, 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்விற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அரசின் இந்த உத்தரவு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது நிலைமை சீரடைந்து வரும் போது, தேர்வுகள் ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பினர். இதையடுத்து 12ம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது.

அதன் பின்னர், 10ம் வகுப்பிற்கு எந்த அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டைப் போல நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் பிளஸ் 1 அல்லது பாலிடெக்னிக் உயர்கல்விக்கு மாணவர்களை எதன் அடிப்படையில் சேர்ப்பது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட அளவிலான வினாத்தாளின் படி மூன்றாம் பருவ தேர்வை மட்டும் நடத்த அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

அதன்படி அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories