Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 21, 2021

10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: கொந்தளிக்கும் கல்வியாளர்கள் - தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முடிவின் பின்னணி என்ன?

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுவான தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவு கல்வியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம்?

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. இதனால், சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், ``கொரோனா காலத்தில் மாணவர்களை தேர்வு எழுதக் கட்டாயப்படுத்தக் கூடாது. இந்தத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இதே கருத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் முன்வைத்தனர்.

இதையடுத்து, இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ``கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. மாணவர்களை மதிப்பிட விரைவில் புதிய மதிப்பீட்டு முறை வெளியிடப்படும். இவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்ணில் மாணவருக்கு மனநிறைவு ஏற்படாவிட்டால் அந்த மாணவர் தனிப்பட்ட முறையில் பள்ளிக்கு சென்று, முறையிட்டு, தேர்வை எழுதிக் கொள்ளலாம்,'' எனத் தெரிவித்தது.

மாணவர்கள் பொம்மைகளா?

தற்போது இதே வழிமுறையைப் பின்பற்றி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``தமிழ்நாட்டில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும். மதிப்பெண்ணை உயர்த்த விரும்பும் மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதலாம். இந்தத் தேர்வுகளை எழுத விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்வு செய்யப்படுவர்'' எனத் தெரிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ``என்ன அநியாயம் இது! யார் இந்த முடிவை எடுத்தது. நம்முடைய மாணவர்கள் என்று நினைக்கிறீர்களா அல்லது ஏதோ விளையாட்டு பொம்மைகள் என்ற எண்ணமா? உங்கள் குழப்ப விளையாட்டுக்கு ஓர் அளவே இல்லையா? குதிரை கீழே தள்ளியதுமில்லாமல் குழியும் பறிக்கிறதே'' என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, தங்கம் தென்னரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``என்னுடைய கோபத்துக்குக் காரணமே, பள்ளிக்கல்வித்துறை தினசரி ஓர் அறிவிப்பை வெளியிடுவதுதான். முதலில், `தேர்வுகளே இல்லை' என்றார்கள். தற்போது, `பொதுவான தேர்வு வைப்போம்' என்கிறார்கள். `ஏன் இப்படியொரு குழப்பத்தை அரங்கேற்றுகிறீர்கள்' எனக் கேட்கிறேன். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட்டு, பின்னர் மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்வதற்கு தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்பது சிந்தித்து எடுத்த முடிவுதானா? கல்வித்துறை நினைத்த நேரத்தில் அறிவிப்புகளை வெளியிடுகிறது" என்கிறார்.

10 லட்சம் பேரின் எதிர்காலம்

தொடர்ந்து, `` இந்த அறிவிப்புக்குப் பின்னால் என்ன ஆலோசனைகள் நடத்தப்பட்டன? பத்தாம் வகுப்பு தேர்வு என்பது பத்து லட்சம் பேர் எழுதக் கூடிய ஒன்று. இதற்காக அந்த மாணவர்கள் எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும். கொரோனா தொற்று காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன. அதைவிட, எண்ணிக்கையில் அதிகமாக இருக்கக் கூடிய பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதலாம் என்கிறார்கள். இதற்காக பள்ளிகளில் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

பிளஸ் 2 தேர்வை நிறுத்தியதற்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்துவிட்டதா. இவர்களுக்கு நினைவு வரும்போதெல்லாம் அறிவிப்பு வெளியிடுவதால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

தேர்வுகள் துறை மட்டும் இந்த முடிவை எடுக்கவில்லை. இதன் பின்னணியில் அமைச்சரும் துறையின் செயலரும் உள்ளனர். எதை வைத்து இப்படியொரு முடிவுக்கு வருகின்றனர் எனத் தெரியவில்லை. கொரோனா தொற்று காரணமாக நாள்தோறும் கட்டுப்பாடுகளை அதிகரித்தபடியே செல்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பள்ளிக்கல்வித்துறையின் இந்த முடிவு மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் செயலாகத்தான் பார்க்கிறேன்" என்கிறார்.

`பத்தாம் வகுப்புக்கு பொதுவான தேர்வு என்ற அறிவிப்பு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?' என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உஷா ராணியை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு கேட்டோம். `` இப்போது ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்" என்று கூறினார்.

குழப்பம் எங்கே வருகிறது?

இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். `` பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் உள்பட அனைவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். சி.பி.எஸ்.இ கடந்த வாரம் வெளியிட்ட வழிமுறைகளை அப்படியே பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் சில சிக்கல்கள் உள்ளன" என்கிறார்.

``10-ம் வகுப்பில் ஒரு மாணவர் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் மேல்நிலை வகுப்புகளில் எந்த பிரிவில் சேர்ப்பது என்பது முடிவு செய்யப்படும்.

கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பெறும் மதிப்பெண் மிகவும் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை வழங்கும்போது இதில் குழப்பம் ஏற்படலாம். அதனை நிவர்த்தி செய்வதற்காக இப்படியொரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

தெளிவுபடுத்துமா அரசு?

அரசைப் பொறுத்தவரையில், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு மதிப்பெண்ணை வழங்கலாம் என முடிவு செய்துள்ளது.

கடந்த ஓராண்டாக பள்ளிகள் இயங்கவில்லை. எனவே, எந்த அடிப்படையில் மதிப்பெண்ணை வழங்குவது என்பதில் குழப்பம் நீடித்தது. வருகைப் பதிவேடு அடிப்படையில் கொடுப்பதிலும் தடைகள் உள்ளன. வகுப்புகளே நடக்காதபோது இதை எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும்? இதில், `என்ன மதிப்பெண் வழங்கினாலும் சரி.. எந்த குரூப் கொடுத்தாலும் சரி' என்ற மனநிலையில் உள்ள மாணவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால், உயர்கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும், மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மதிப்பெண் தேவைப்படும். இதற்காகத் தயார் செய்து வரும் மாணவர்கள், பள்ளிக்கு வராவிட்டாலும் கற்றலுக்காக கூடுதல் நேரத்தைச் செலவிட்டிருப்பார்கள்.

அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக இப்படியொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி என அறிவித்த அரசு, `11 ஆம் வகுப்புகளில் எதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்' என்பதை தெளிவுபடுத்தியிருந்தால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்காது.

பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனின் சிறப்பை வெளிப்படுத்தும் ஒரே ஆயுதமாக மதிப்பெண் இருக்கிறது. பெருந்தொற்றால் பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள், பொருளாதார சூழல் காரணமாக தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் உள்ளது. குடும்பத்தில் நிலவும் வறுமை காரணமாக படிப்பதற்கான சாத்தியக் கூறு இல்லாமல் வேலைக்குச் செல்லும் மாணவர்களும் உள்ளனர். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அரசு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும்" என்கிறார்.

No comments:

Post a Comment