Thamizhkadal WhatsApp Channel

அடுத்த 2 வாரம் மிகவும் முக்கியம்: சுகாதார துறை செயலர் எச்சரிக்கை

'கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதால், அடுத்த இரண்டு வாரம் மிக முக்கியமான காலம். பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, வளசரவாக்கத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்றால், சென்னையில், 18 ஆயிரத்து, 673 பேர் உட்பட, தமிழகம் முழுதும், 49 ஆயிரத்து, 985 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில், 81 ஆயிரத்து, 871; 'கோவிட் கேர்' மையங்களில், 28 ஆயிரத்து, 95 படுக்கைகள் என, தமிழகத்தில், மொத்தமாக, 81 ஆயிரத்து, 871 படுக்கைகள் உள்ளன.

தற்போது, 6,517 வென்டிலேட்டர்களும்; 1 லட்சத்து, 49 ஆயிரத்து, 822, 'ரெம்டெசிவிர்' மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.

தமிழகத்திற்கு, 54 லட்சத்து, 85 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 40 லட்சத்து, 99 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா விதிமீறிலில் ஈடுபட்ட, 2.39 லட்சம் பேரிடம், 5.07 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளது. இதன் வேகம் படிப்படியாக உயரும் என்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு, மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.

இயல்பாக உள்ளது என்ற எண்ணத்தில், பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழலை நிறுவனங்கள் பின்பற்றுவது நல்லது. பொதுமக்கள், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்; பொது இடங்களுக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.மஹாராஷ்டிரா மாநிலம் போன்ற சூழல் தமிழகத்தில் இல்லை. ஊரடங்கு போடுவது குறித்து, அரசு கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டும். தமிழகம் முழுதும், 3,766 அரசு தடுப்பூசி மையம் உட்பட, 4,795 மையங்கள் உள்ளன. முதல் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது; ஆனால், பாதிப்பு குறைவாக உள்ளது.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories