Search This Blog

Friday, April 16, 2021

இன்று கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது பிளஸ் 2 செய்முறை தேர்வு

0 comments
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளன. கொரோனா பரவல் காரணமாக, நான்கு குழுக்களாக மாணவர்களை பிரித்து, தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 5ம் தேதி முதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 

இதன் முதற்கட்டமாக, செய்முறை தேர்வுகள் இன்று துவங்குகின்றன. கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, பல்வேறு வழிகாட்டல்களை பின்பற்றி, செய்முறை தேர்வுகளை நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு முறைகளை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டு உள்ளார்.அதன் விபரம்:

செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்; வெப்ப பரிசோதனைக்கு பின்னரே, அவர்களை ஆய்வகங்களில் அனுமதிக்க வேண்டும்* ஒரு பிரிவு மாணவர்கள், தேர்வை முடித்து வெளியே வரும் வரை, மற்றொரு பிரிவு மாணவர்கள், காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும். 

ஒவ்வொரு மாணவருக்கும், 4 சதுர மீட்டர் இடம் ஒதுக்க வேண்டும் மாணவ - மாணவியர், 'சானிடைசரால்' கைகளை சுத்தம் செய்த பின்னரே, செய்முறை பயிற்சியில் அனுமதிக்கப்பட வேண்டும். 

சானிடைசர் தீ பற்றும் தன்மை உள்ளதால், அதை ஆய்வகத்தின் பாதுகாப்பான பகுதியில் கையாள வேண்டும் முக கவசம், கையுறைகள் அணிவதை பின்பற்ற வேண்டும். செய்முறை தேர்வின் போது, ஆய்வகத்தின் ஜன்னல்கள், வாசல் கதவுகள் திறந்திருக்க வேண்டும்.

ஆய்வகங்களின் அனைத்து பகுதிகளிலும், ஆய்வகக் கருவிகளிலும் செய்முறை தேர்வுக்கு முன், பின், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். 

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலோ; தொற்று கண்டறியப்பட்டாலோ, அந்த மாணவர்கள், மற்ற மாணவர்களுடன் தேர்வில் பங்கேற்க அனுமதியில்லை. அவர்களுக்கு வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment