சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்வதற்காக, இணையதள பக்கம் நேற்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
எனினும், பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.இதையடுத்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.'யூனிட்' தேர்வின் அடிப்படையில், 10 மதிப்பெண்கள், 'மிட்டர்ம்' தேர்வு அடிப்படையில், 30 மதிப்பெண்கள், 'பிரீபோர்ட்' தேர்வு அடிப்படையில், 40 மதிப்பெண்கள் என, 80 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு பாடத்திற்கும், 'இன்டர்னல் அசஸ்மன்ட்' எனப்படும் உள்மதிப்பீடு அடிப்படையில், மீதமுள்ள, 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மதிப்பெண்களை, வரும் ஜூன், 11ம் தேதிக்குள், வாரியத்தின் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மதிப்பெண்களை பள்ளி நிர்வாகம் பதிவேற்றம் செய்வதற்காக, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தால், இணையதள பக்கம் நேற்று செயல்படுத்தப்பட்டது. 'இனி, மாணவர்களுக்கான மதிப்பெண்களை இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதிப்பெண்களும் பெறப்பட்ட பின், வரும் ஜூன், 20ம் தேதி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment