ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜூலை 31ஆம் தேதிக்குள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இறுதி செய்யப்பட்டுவிடும். மேலும், சி.பி.எஸ்.இ தேர்வு மதிப்பெண்கள் ஜூலை 31ஆம் தேதிதான் வெளியாகிறது. சி.பி.எஸ்.இ மதிப்பெண், மாநிலக் கல்வி வழியில் பயின்ற மாணவர்களின் மதிப்பெண் வந்தபின்னர், ஆகஸ்டு 1ஆம் தேதிக்குப் பின்தான் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இதை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக்கில் சேர்க்கப்படும் மாணவர்கள் 2 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். இதுதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அரசின் முடிவு. மேலும், பொறியியல் கல்லூரிகளில் வழக்கமாக இருக்கும் அதே முறைதான் பின்பற்றப்படும். சி.பி.எஸ்.இ, மாநிலக் கல்வி மதிப்பெண்கள் அனைத்தும் ஒரே மதிப்பெண்தான். அதில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைதான் உள்ளது.
கொரோனா பேரிடர் காலம் என்பதால், கல்லூரி மாணவர் சேர்க்கையில் கால தாமதம் ஏற்படுகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் இயற்றப்படும். ஏற்கனவே, கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்திருக்கிறோம் என்பதால், நீட் தேர்வையும் ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment