ரேஷன் கடைகள் மூலம் கபசுர குடிநீர் பாக்கெட் வழங்கும் திட்டம் ?

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர் பாக்கெட்களை இலவசமாக வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த சித்தா மருந்தாக கபசுர குடிநீர் விளங்குகிறது. இந்த நிலையில் கபசுர குடிநீர் பாக்கெட்களை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நெல்லையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், கபசுர குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

எனவே, கொரோனா தொற்று பாதித்து பலியாவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும், பதிவு செய்யப்பட்ட சித்த மருத்துவர்களை கொண்டு சித்தா சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இது மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது என கூறினர். மேலும், கபசுர குடிநீரின் நோய் எதிர்ப்பு திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel