Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 25, 2021

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழியில் பாடம் நடத்த தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் இணையவழியில் பாடங்களை நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பு, தமிழகம் உட்பட 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருச்சி,மதுரை உட்பட 12 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில்கற்பித்தல் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டன.

நடப்பாண்டும் இத்திட்டங்களை தொடர அந்த நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. மேலும், திருவாரூர், ஈரோடு, கடலூர், திருப்பூர், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 18 மாவட்டங்களில் புதிதாக அறிவியல் ஆய்வு மையம் அமைக்கவும் அனுமதி கேட்டுள்ளது. இதுதவிர, அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புமாணவர்களுக்கு அறிவியல், கணித பாடங்களை இணையவழியில் கற்றுத் தரவும் அந்நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

கரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளைக்கு கற்பித்தல் திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரப்படுகிறது. பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு பாதிக்காதவாறு அகஸ்தியா அறக்கட்டளைக்குத் தேவையான ஒத்துழைப்பை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

மேலும், அகஸ்தியா நிறுவனத்தின் அறிவியல் சார்ந்த கற்றல் செயல்பாடுகள், அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய அனுமதி

கற்றல், கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென தேசிய கல்விக் கொள்கை-2020 வலியுறுத்துகிறது. அதன்படி, கடந்த அதிமுக ஆட்சியின்போது கல்விசார் பணிகளில் ஈடுபட அகஸ்தியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன.

அதேசமயம், ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக, தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. எனினும், அகஸ்தியாநிறுவனத்துக்கு தொடர் அனுமதி வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிறுவனத் தலைவர் ராம்ஜி ராகவன், மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும், பிரதமரின் தேசிய அறிவியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment