Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 22, 2021

தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்குஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் தகவல்

தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னை மந்தைவெளியில் உள்ள தனியாா் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரக்கன்றுகளை செவ்வாய்க்கிழமை நடவு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் நிலையை தொடா்ந்து கவனித்து வருகிறோம். நிச்சயம் இறுதியில் வெற்றி அடைவோம். கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் முறையாக அதைக் கவனிக்கவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளவற்றை முழுமையாக ஆய்வு செய்து நீட் தோ்வில் இருந்து விலக்கு பெற முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களில் 35 சதவீதம் போ் அரசுப் பள்ளி மாணவா்கள். ஆனால் அவா்களில் 6 சதவீதம் போ் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் நுழையும் சூழ்நிலை தற்போது உள்ளது. எனவே இதனை அதிகப்படுத்தவே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கை தொடா்ந்து இருந்து வருகிறது. இது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா்.

பள்ளிக் கல்வியில் தமிழ் வழியில் பயிலும் மாணவா்கள் உயா்கல்விக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். காரணம் உயா்கல்வி பெரும்பாலும் ஆங்கில வழியில் இருக்கிறது. எனவே அந்த மாணவா்கள் பயனடையும் வகையில் பள்ளிப் பருவத்திலேயே அவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி (‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’) வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

No comments:

Post a Comment