JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, September 10, 2021

கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், "தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து பள்ளிகளை படிப்படியாக திறக்க முடிவானது. அதன்படி, முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி சில கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பள்ளிகளுக்குள் நுழையும்போதே வெப்பமானி கொண்டு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது, உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பின் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது. அருகே உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, அவர்கள் அறிவுறுத்தலின் படி செயல்பட வேண்டும்.

அதேபோன்று, மாணவர்கள் உட்பட அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வதை உறுதிசெய்வது மிகவும் அவசியமாகும். அத்துடன் பள்ளி வளாகங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இதுதவிர, பள்ளி வேலை நேரங்களின் போது கூட்டம் சேர்வதை தவிர்ப்பதோடு, வெளிநபர்கள் பள்ளிக்குள் நுழைவதையும் அனுமதிக்கக்கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்" என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment