Search This Blog

Saturday, September 25, 2021

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு

0 comments
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 761 பேர் உடனடி நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

யூபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக இத்தேர்வுகள் நடைபெறும். இளங்கலைப் பட்டம் முடித்திருப்பது தேர்வை எதிர்கொள்ள அடிப்படைத் தகுதியாக உள்ளது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் போட்டியாளர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோராண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பப் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்களுக்கு தேர்வு நடந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 761 பேர் உடனடி நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 263 பேர் பொதுப் பிரிவிலும் 86 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பிரிவிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஓபிசி பிரிவில் 229 பேரும், எஸ்சி பிரிவில் 122 பேரும் எஸ்டி பிரிவில் 61 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலிடத்தை சுபம் குமாரும், இரண்டாம் இடத்தை ஜக்ரதி அவஸ்தியும் மூன்றாம் இடத்தை அங்கிதா ஜெயினும் பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை https://upsc.gov.in/sites/default/files/FR-CSM-20-engl-240921-F.pdf என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment