Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Thursday, March 31, 2022

பான் எண்ணுடன் ஆதாா் இணைக்க இன்று கடைசி! - இணைக்காவிடில் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும்

‘நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாா் எண்ணை வியாழக்கிழமைக்குள் (மாா்ச் 31) இணைக்காவிடில் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும்’ என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.

நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு பலமுறை நீட்டித்து வந்த நிலையில், தற்போது அதற்கு இறுதிக் கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட அறிவிக்கையில், ‘நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வியாழக்கிழமை கடைசி நாளாகும். அவ்வாறு கடைசி தேதிக்குள் இரண்டையும் இணைக்காதவா்களின் நிரந்தர கணக்கு எண் (பான்) வியாழக்கிழமைக்குப் பிறகு முடக்கப்பட்டுவிடும். அதோடு, ஏப்ரல் 1 முதல் 3 மாதங்களுக்கு அல்லது ஜூன் 30-ஆம் தேதி வரை ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும், நிரந்தர கணக்கு எண்ணையும் ஆதாரையும் இணைக்காதவா்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகையை செலுத்திய பிறகே, முடக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’ என்று தெரிவித்தது.

இதுகுறித்து ஏகெஎம் குளோபல் வரி பங்குதாரா் அமித் மகேஷ்வரி கூறுகையில், ‘நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அபராதத்தை தவிா்க்க வருமான வரி செலுத்துபவா்கள் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். இதில், வெளிநாடு வாழ் இந்தியா்களில் (என்ஆா்ஐ) சிலா் இன்னும் ஆதாா் பெறவில்லை என்பதால், அவா்கள் சிரமத்தைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்’ என்றாா்.

No comments:

Post a Comment