Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 29, 2022

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை- பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களை வகுப்புகளுக்கு வரச்சொல்லக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும் என பள்ளி கல்வி துறை ஏற்கனவே அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் நடப்பு கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் இருந்து கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம் போல பள்ளிகள் செயல்பட தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்றும் தெரிவித்தது. பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது. பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மேலும் அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால், அதற்கு பெற்றோரே பொறுப்பேற்று, மாற்றித் தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டுமெனவும் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்தால், அருகே உள்ள வேறு பள்ளிக்கு மாற்றவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளியில்‌ மாணவர்கள்‌ சண்டையிட்டுக்‌ கொள்ளுதல்‌, சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம்‌ எதுவென்றாலும்‌ உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்‌. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின்‌ அனுமதியின்‌ பேரில் தான்‌ ஊடகங்களுக்கு செய்தி தர வேண்டும்‌. பேருந்தில்‌ வரும்‌ மாணவர்கள்‌ பேருந்தின்‌ மேற்கூரையில்‌ அமர்ந்து கொண்டு வருவதை தவிர்க்க காலை இறை வணக்ககூட்டத்தில்‌ தக்க அறிவுரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment