Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 13, 2022

ஆக.16ல் தரவரிசை பட்டியல் ரிலீஸ்..தமிழக பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக காரணம் என்ன?

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

திட்டமிட்டபடி பொறியியல் கலந்தாய்வு கடந்த 8ஆம்தேதி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதமாக வந்ததால் ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி கலந்தாய்வு தொடங்கப்படவில்லை.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் சேர்க்கை நடைமுறைகள் தள்ளிப்போகின்றன. 2.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வருகிற 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன், 1.49 லட்சம் மாணவிகள் கட்டணம் செலுத்தி அனைத்து நடைமுறைகளையும் முடிந்துள்ளனர். அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாராகிறது.

தரவரிசை பட்டியல் 16ஆம்தேதி வெளியான பின்னர் 4 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. 20ஆம்தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கும், அதனை தொடர்ந்து விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதேபோல அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பல்வேறு சுற்றுகளாக இக்கலந்தாய்வு அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்த பின்னர் 7 வேலை நாட்களுக்குள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட அந்த நாட்களுக்குள் கட்டணம் செலுத்தவில்லை என்றால் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள அடுத்த மாணவருக்கு அந்த இடம் மாறிவிடும். தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கலந்தாய்வை சீரிய முறையில் நடந்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. ஏற்கனவே உள்ள சாப்ட்வேர் மூலம் இடஒதுக்கீட்டை பின்பற்றி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்று கூறினார்.

No comments:

Post a Comment