தமிழ்நாடு அரசின் சார்பில், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 3552 காவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழ்நாடு காவல்துறை, சிறைத் துறை மற்றும் மீட்புப்பணித் துறைகளில் காலியாக உள்ள 3552 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல்திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறுகிறது.
இந்நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வர்களுக்கு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய மையங்களில் உள்ள போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று பயிற்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர்/ பயிற்சித்துறை தலைவர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், " போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது அண்மையில் நடைபெற்ற TNPSC Group IV எழுத்துத் தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களால் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர்.
இரண்டாம் நிலைக் காவலர்,இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்ப படிவம் ஆகியன www.civilservicecoaching.com என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் மேற்படி இணைய தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14-09-2022 வரை தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையங்களில் நேரடியாக அளிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 044 24621475 மற்றும் 044 24621909 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் தேர்வர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
மேலும், இப்பயிற்சிக்கு, தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விவரங்கள் மற்றும் சேர்க்கைக் குறித்த நாள் ஆகியவற்றை மேற்படி இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். அழைப்புக் கடிதம் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட மாட்டாது.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியிலிருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டும், அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டும் பயிற்சிகள் வழங்கப்படும். மேற்படி தேர்விற்கு வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்
காத்திருப்பு தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான நாட்கள் காலியிடங்களுக்கேற்ப www.civilservicecoaching.com இணையவழியாக தெரிவிக்கப்படும். பயிற்சி வகுப்புகள் 21.09.2022 முதல் தொடங்கப்படும். இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment