தீபாவளி திருநாளில் நம்முடைய முன்னோர்களை நினைத்து வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும். நற்காரியங்கள் தடைகள் இன்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
ஐப்பசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கினால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும். நமது ஏழு தலைமுறையும் செல்வ வளத்தோடு கோடீஸ்வர யோகத்தை பெறுவார்கள்.
தீபாவளித் திருநாளன்று, நாம் செய்யும் பூஜையையும், படையலையும் பித்ருக்கள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு, நம்மை ஆசீர்வதித்து, பின்னர் அவர்களது உலகுக்குத் திரும்புகின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் தீபாவளித் திருநாளில் பித்ருக்களை அவசியம் வழிபட வேண்டும். இதனால் மறைந்த நம் முன்னோர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
இன்றைக்கும் பல வீடுகளில் கன்னி தெய்வ வழிபாடாக முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ரிப்பன், கண்ணாடி, காதோலை கருகமணி, கண்மை, சீப்பு, வளையல், பவுடர், ஹேர்ப்பின், சிறிய ஆடைகள் படைத்து வழிபட வேண்டும். இதன் பின்னரே புத்தாடைகளை அணிந்து தீபாவளி கொண்டாடுகின்றனர்.
முன்னோர் வழிபாடு
நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த நாளாகவும், மகாபலி மன்னர் முடிசூட்டிக்கொண்ட நாளாகவும் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் நம் முன்னோர்களை நினைத்து வணங்கி வழிபடுவதன் மூலம் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பித்ரு வழிபாடு
நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.
பித்ரு கடன்
நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வார்கள்.
பித்ரு சாபம்
மனதில் கவலையுடன் வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பார்கள். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பித்ரு தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.
முன்னோர்களுக்கு படையல்
ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் மகாளய பட்சம், மகாளய அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டிற்கு ஏற்ற நாட்கள். அதேபோல தீபாவளி திருநாளான சதுர்த்தசி நாளிலும் பித்ரு வழிபாடு செய்யலாம். புதுத்துணிகளை படைத்து, இனிப்புகள், உணவுகளை படையலிட்டு முன்னோர்களை வணங்கினால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஐப்பசி அமாவாசை
மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள் ஐப்பசி அமாவாசை வரை பூலோகத்திலிருந்து நாம் தரும் தர்ப்பணம் மற்றும் பூஜைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதாகவும் ஐதீகம். எனவே ஐப்பசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கினால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
சூரிய கிரகண தர்ப்பணம்
மாதந்தோறும் வருகிற அமாவாசை, கிரகண காலம், ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதப் பிறப்பு, புரட்டாசி மகாளய பட்ச பதினைந்து நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன. இந்த நாட்களில், மறக்காமல் நம் முன்னோர்களை வணங்க வேண்டும். அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். இந்த ஆண்டு ஐப்பசி அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் நிகழ்வதால் நாம் அளிக்கும் தர்ப்பணம் நம்முடைய ஏழு தலைமுறைக்கும் கோடீஸ்வர யோகத்தை தருமாம்.
முன்னோர்களுக்கு படையல்
மறைந்த நம்முடைய முன்னோர்களின் படத்தை அலங்கரிக்க வேண்டும். முன்னோர்களின் படங்களுக்கு சந்தனம் குங்குமம் இட்டு, பூக்கள் சார்த்தி வணங்க வேண்டும். படத்தின் முன்பாக முழு வாழை இலையில் தீபாவளி நாளில் சுட்ட பலகாரங்களையும் உணவையும் படைத்து வணங்க வேண்டும். மறைந்த முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவிட வேண்டும். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். காரியங்களில் வெற்றி உண்டாகும். செல்வ வளம் பெருகும். தீபாவளி திருநாளிலும் ஐப்பசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு அவர்களின் ஆசியை பெறுவோம்.
No comments:
Post a Comment