Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 28, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2022


திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்: இல்லறவியல் 

அதிகாரம்: மக்கட்பேறு 

குறள்: 69 

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய். 

பொருள்: 
தன்மகன் ' சான்றோன் 'என பிறரால் பாராட்டப்படும் போது அவனை பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட கூடுதலான மகிழ்ச்சியை அந்தத்தாய் அடைவாள்.

பழமொழி :

chew your food well and live a long life.
நொறுங்க தின்றால் நூறு வயது வாழலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.

 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது. --நெல்சன் மண்டேலா.

பொது அறிவு :

1. வெண்மை புரட்சி எதைக் குறித்து உருவானது? 

பால் வளத்தைப் பெருக்குதல். 

2. நீலப் புரட்சி எதைக் குறித்து உருவானது? 

கடல் வளத்தைப் பெருக்குதல்.

English words & meanings :

buy - purchase. verb. வாங்குவது. வினைச் சொல். by - through. preposition.மூலமாக. முன்னிடை சொல். bye - goodbye. noun. விடை பெறுவது. all homonyms

ஆரோக்ய வாழ்வு :




ஆரஞ்சு வைட்டமின் சி இன் மிகவும் வளமான மூலமாகும். மேலும் இது இயற்கையாகவே கொழுப்பை எரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. வைட்டமின் சி உடலின் வளர்சிதை மாற்றம் நன்றாக செயல்பட உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கான சிறந்த பழமாக உள்ளது. அவை நீர்ச்சத்து அதிகம் மற்றும் உங்கள் ஒழுங்கற்ற பசி உணர்வை குறைக்க உதவும்.

NMMS Q

மஞ்சு 29 2 1984 இல் பிறந்துள்ளார் எனில் அவர் 2020 வரை எத்தனை பிறந்த நாள்களை கொண்டாடி இருப்பார்? 

விடை : 9 

விளக்கம்: 1984 முதல் 2020 வரை உள்ள லீப் வருடங்களை கணக்கில் கொண்டு கணக்கிடலாம்.

நீதிக்கதை

பொய்

மேட்டுக்குப்பம் என்ற ஊரில் சுதன் என்பவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள். தினந்தோறும் பத்துப் பேருக்கு அன்னதானம் அளிக்கிறேன் என்று பொய் சொல்லி காசுகளை வாங்குவான் சுதன். 

ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறு கூட போட மாட்டான். அன்னதானம் வாங்குவதற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ஐயா! இப்பத்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள் வயிறார சாப்பிடலாம், என்று இனிமையாகப் பேசி அனுப்பிவிடுவான். 

பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். இவன் யாரையும் ஏமாற்றி விடுவான். சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன். சுதன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்று மகேன் சுதன் வீட்டிற்கு சென்றான். ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன், என்றான். 

ஆமாம், உண்மைதான். தினந்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர். ஆனால், உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை, நாளை வாருங்கள் என்று சொல்லி வீட்டுக்குள் சென்ற சுதனிடம், யார் வந்தது? என்று மனைவி கேட்டாள். 

நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். நாளை வா! என்று சொல்லி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான், என்று சொல்லிச் சிரித்தான் சுதன். 

மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன். தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், கதவை திறந்தான். ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள், என்று சொல்லி அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான் மகேன். 

உள்ளே வந்த சுதன், மனைவியிடம், நேற்று வந்த வெளியூர்காரன் இன்று விடிகாலையிலேயே வந்து நம் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது, என்று கவலையுடன் சொன்னான். 

கவலை வேண்டாம், அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, என்று சொல்லி அனுப்பி வையுங்கள், என்றாள் அவள். மனைவி சொல்படி, பொழுது விடிந்ததும் மகேனிடம் சோகமான முகத்துடன் வந்த சுதன், என் மனைவிக்குக் காய்ச்சல் படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் சமைக்க முடியாது. நாளை வாருங்கள் கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம், என்றான். 

மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன், என்று சொல்லி சமையல் அறைக்குச் சென்று, சமைக்கத் தொடங்கினான். இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர். 

சிறிது நேரம் சென்றது. சுதனுக்கும், மனைவிக்கும் ஒரு யோசனை வந்தது அதன்படி, மகேன் சமையலை முடித்தான். அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழை இலைகளை அரிந்து எடுத்து வாரும், என்றான் சுதன். 

அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான். அவன் வருவதை இருவரும் பார்த்தனர். உரத்த குரலில் அவள், வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது என்று கோபத்துடன் கத்தினாள். நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன், என்று கத்தினான் சுதன். 

இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே பார்த்தனர். இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து சண்டை போட்டனர். சற்று நேரத்தில் அங்கே அவனைக் காணவில்லை. இவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு, அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம், என்றாள் சுதனின் மனைவி. 

இருவரும் சாப்பிட அமர்ந்தனர். பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், அவர்கள் முன் குதித்தான். தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்து, அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர். 

நீதி :
ஏமாற்றுபவர்கள் ஒருநாள் ஏமாறுவார்கள்.

இன்றைய செய்திகள்

28.11.22

* கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. காலையில் கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை கண்டு  ரசித்தனர்.

* தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு  ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* அறிவியல் மனப்பான்மையை 6 முதல் 8 வரை உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் மேம்படுத்த 'வானவில் மன்றம்' : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

* மெரினாவில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள
 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன நிரந்தர நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

* ரயில் வேகத்தை அதிகரிக்கப் புதிய தொழில்நுட்பம்: 2025-ல் அறிமுகம்- இந்திய ரயில்வே நிர்வாகம்   அறிவித்துள்ளது.

* புரோ கபடி லீக்கில் இன்று நடைபெறும் முக்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Today's Headlines

* Kanyakumari is crowded with tourists during the Sabarimala season.  In the morning they gathered on the beach and enjoyed the sunrise.

*  Chennai Meteorological Center has said that light to moderate rain may occur at a few places in Tamil Nadu from today for the next 3 days.

 * Rainbow forum' to develop scientific attitude among students in 6th to 8th government schools: Chief Minister M.K.Stalin inaugurates.

* A permanent footpath for the disabled is coming into use today Developed under the 'Singara Chennai 2.0' project at the Marina.

*  New technology to increase train speed: Introduction by 2025- Indian Railways has announced.

* Tamil Thalaivas will face Gujarat Giants in today's main match of the Pro Kabaddi League.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment