அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிய மாநில அளவில் நேர்முகத் தேர்வு ஜனவரி 3ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கலை கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற 1,895 பேர் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து. கடந்த காலங்களில் கௌரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்தும் போது அந்தந்த கல்லூரி முதல்வர்களே அவர்களை பணியில் நியமனம் செய்தனர். இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக நேர்முகத் தேர்வின் வாயிலாக கௌரவ விரிவுரையாளர்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற 9,915 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு வருகின்ற 3ம் தேதி சென்னையில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக கூறினார்.
4ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழக முழுவதும் உள்ள 8 பல்கலைக்கழகங்களில் பாடவாரியாக நேர்முகத் தேர்வானது நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தரத்தின் அடிப்படையில் அவர்களுக்கான பணி வழங்கப்படும். PhD, Net, Slet ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அவர்களுக்கான பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நேர்முக தேர்வில் சமூக ரீதியிலான இட ஒதுக்கீடு வழங்கப்படும். கலப்பு திருமணம் செய்வதற்கு இட ஒதுக்கீடு கிடையாது எனவும், விரிவுரையாளர்கள் பணிகளில் வட மாநிலத்தவருக்கு வாய்ப்பு கிடையாது எனவும் தெரிவித்தார்.
மேலும் கௌரவ விரிவுரையாளர்கள் 11 மாத அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கான ஊதியம் 20,000 ரூபாய் வரை வழங்கப்படும். தற்போது கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் 11 மாத காலம் பணியாற்றிய பின் அவர்களும் நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தப்படுவார்கள். அப்போது தகுதி இல்லாத கௌரவ விரிவுரையாளர்கள் பணியை விட்டு சென்று விடுவார்கள் எனவும் தெரிவித்தார்.










No comments:
Post a Comment