JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, January 25, 2023

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 812 பேர் கவுரவிப்பு

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் 812 பேருக்கு குடியரசு தினவிழாவில் சிறப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. 

சுமார் 2 ஆண்டுகள் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதிலும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புகளில் படித்த குழந்தைகள் பள்ளிக்கு நேரடியாக வர முடியாத நிலை ஏற்பட்டதால், 1 முதல் 3ம் வகுப்பு வரை படித்த குழந்தைகள் கற்றலில் இடைவெளி ஏற்பட்டது.

அந்த இடைவெளியை போக்கி அவர்கள் எண்ணையும், எழுத்துகளையும் அடையாளம் கண்டு எழுதவும் படிக்கவும் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், தமிழ்நாடு அரசு, எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. 

அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் சிறப்பாக செயல்பட்ட 812 ஆசிரியர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


அவர்களுக்கு, சென்னையில் நாளை நடக்க இருக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு செய்யவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் சென்னை 22, செங்கல்பட்டு 12, காஞ்சிபுரம் 13, திருவள்ளூர் 3 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாளை சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ள குடியரசு தின விழாவில் மேற்கண்ட 812 பேருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு செய்வார்.

No comments:

Post a Comment