பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என நிதித்துறை உயர் அலுவலகர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து நிதித்துறை அலுவலர்கள் விளக்கமளித்துள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆராய தமிழ்நாடு சார்பில் சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம் தமிழ்நாடு அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதுகுறித்து விளக்கத்தை தமிழ்நாடு நிதித்துறை உயர் அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியில் 2003-ம் ஆண்டு பணி நியமன ஆணை பெற்று 2004-ல் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படவில்லை. பழைய ஒய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படாத அரசு ஊழியர்களின் விவரங்களை பெறவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக நிதித்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment