Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 7, 2023

TET - ஆசிரியர் தேர்வு தேதி குளறுபடி; எழுத முடியாமல் தேர்வர்கள் தவிப்பு


தஞ்சாவூரில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில், தேதி குளறுபடியால், 13 பேர் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுதும், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இரண்டாம் தாள், கடந்த, 3ம் தேதி தொடங்கி, வரும், 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏழு கல்லுாரிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள தனியார் நிகர் நிலை பல்கலையில், நேற்று தேர்வு எழுத வந்தவர்களிடம், அந்த தேர்வு, 4-ம் தேதியே முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேர்வு எழுத முடியாதவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள், அங்கு சென்று பேச்சு நடத்தினர். வேறு ஒரு நாளில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என, உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கூறியதாவது: தேர்வு எழுத வந்த அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில், தேதி மாறி இருந்ததால், 13 பேர் தேர்வு எழுதவில்லை. அவர்களுக்கான தேர்வு, 4ம் தேதியே முடிந்து விட்டது. இந்த குளறுபடியை அரசின் கவனத்துக்கு தெரிவித்து, மற்றொரு நாளில், அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment