JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, March 21, 2023

தமிழகத்தில் திடீரென அதிகரிக்கும் கொரோனா.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் தற்போது இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் திடீரென தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு முழுவதும் 402 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 37 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் ஒரு உயிரிழப்பு இல்லை எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

No comments:

Post a Comment