Follow the THAMIZHKADAL OFFICIAL channel on WhatsApp:
Follow the THAMIZHKADAL OFFICIAL channel on Telegram










Tuesday, March 28, 2023

+2 பொதுத்தேர்வில் 100/100 எடுத்தால் ரூ.10,000 பரிசு

Add This Number In Your Whatsapp Groups -6379884356




சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றால், ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சென்னை மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக சென்னை பட்ஜெட்டை மேயர் பிரியா வாசித்தார். இதில் புதிதாக 80-க்கும் மேற்பட்ட புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்து, NEET, JEE, CLAT போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்லும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்விக் கண்டனத்தை மாநகராட்சி நிர்வாகமே செலுத்தும்.

இதையும் படியுங்கள் : 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

12ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை, 1,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அவர்கள் ஐஐடி மெட்ராஸ், ஐஐஎம் பெங்களூர், டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

10 மற்றும் 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். மேலும் அவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1500-ல் இருந்து 3000 ஆக உயர்த்தி வழங்கப்படும். பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கு முன், சிறு தீனி வழங்கப்படும்.

சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 452 பேருந்து வழித்தடச் சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78 கிமீ நீளத்திற்கு ரூ.55.61 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படும். தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.149.55 கோடி மதிப்பில் 251 கிமீ சாலைகள் மற்றும் மறுசீரமைக்கப்படும். மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.1,487 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, குறைகளை களையும் பொருட்டு, மேயர் மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் செயல்படுத்தப்படும். கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்சத்திலிருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

இவ்வாறான புதிய பல திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை சென்னை மேயர் பிரியா பட்ஜெட் உரையில் அறிவித்தார். மேலும், சென்னையில் நகர்ப்புற சுகாதார மையங்கள், திடக்கழிவு மேலாண்மை, முதியவர்கள் வரி செலுத்த ஆன்லைன் முறை, தூய்மைப் பணியை கண்காணிக்க சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்துதல், பூங்காக்களை பராமரிக்க புதிய நடைமுறை போன்ற அறிவிப்புகளும் சென்னை பட்ஜெட் 2023-24ல் இடம்பெற்றுள்ளது.





No comments:

Post a Comment

Popular Feed