Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 31, 2023

பிளஸ் 2 கணிதத்தில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத் துறை மறுப்பு

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கணிதப் பாடத்தேர்வு 27-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

வினாத்தாளில் மொத்தமுள்ள 90-க்கு 19 மதிப்பெண்கள் பாடப்புத்தகத்துக்கு வெளியே இருந்தும், சிந்தித்து பதிலளிக்கும் நுண்ணறிவு கேள்விகளாகவும் இடம்பெற்றன. மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தும் சில வினாக்கள் கேட்கப்பட்டன. இதையடுத்து விடைக்குறிப்பை எளிமையாக வடிவமைக்கவும், கருணை மதிப்பெண் வழங்கவும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கணித தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத் துறை மறுத்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசுப்பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “பிளஸ் 2 பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற 47-பி கேள்வி தவறாக உள்ளது. அதில் பொருத்தமற்ற வகையில் பரப்பு காண கேட்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நீள்வட்டத்துக்கும், கோட்டுக்கும் பொதுவாக அமையும் பரப்பினைக் காண்க என்பது கேள்வியாகும்.

அதேநேரம் ஒரு நீள்வட்டத்துக்கு அடைபடும் பரப்பு உண்டு. ஆனால், ஒரு கோட்டுக்கு அடைபடும் பகுதி இல்லை என்பதால் அதற்கு ‘பொது பரப்பு’ என்று ஒன்று இருக்க இயலாது. எனவே, இவ்வினா தவறாகும். மாணவர்களால் கேள்வியைப் புரிந்துகொண்டு சரியான விடையை அளிக்க இயலாது.

அதனால் இதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டுமென தேர்வுத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அதிகாரிகள் குழுவினர் மறுத்துவிட்டனர். அதன்படியே விடைக்குறிப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் மாணவர்கள் தேர்ச்சி பெருமளவில் சரியக் கூடும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு மாணவர்கள் நலன் காக்க முன்வர வேண்டும்” என்றனர்.

No comments:

Post a Comment