Monday, March 27, 2023

6 முதல் 9ம் வகுப்பு தேர்வுக்கு சிக்கல்

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் முதுநிலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுவதால் 6 முதல் 9ம் வகுப்பிற்கு அரசு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் 13 ல் துவங்கி ஏப்., 5 வரை நடக்கிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்., 6 ல் தொடங்கி 20 வரை நடக்கிறது. தற்போது பிளஸ் 2 பாட வாரியாக விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. 

மொழி பாட விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 10 வரை நடக்கும். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 23ல் தொடங்குகிறது.

இவ்விரு வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் முதுநிலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபடுவர். இந்த நிலையில் ஏப்.,20 முதல் 28 வரை அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 9 ம் வகுப்பு வரை பொது தேர்வுக்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளனர். 

ஆசிரியர்களே இல்லாத போது எப்படி 6 முதல் 9 ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வினை நடத்த முடியும். தமிழக அரசு 6 முதல் 9 ம் வகுப்பு வரையிலான பொது தேர்வினை பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கு இடைப்பட்ட விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

மாணவர் சிரமம் தவிர்ப்பீர்இது குறித்து தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர். இளங்கோவன் கூறியதாவது:

கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. மாணவர்களுக்கு கோடை வெயில் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். இந்த நிலையில் ஏப்., 20 முதல் 6 முதல் 9ம் வகுப்பிற்கு தேர்வு நடத்துவதை விட, பத்தாம் வகுப்பு தேர்வு இல்லாத பள்ளி வேலை நாட்களில் 6 முதல் 9 ம் வகுப்பிற்கு தேர்வினை நடத்தலாம். 

இதனை அரசு முன்கூட்டியே திட்டமிட்டு, விடைத்தாள் திருத்தும் பணிக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், கோடையில் மாணவர்கள் சிரமத்தை தவிர்க்கும் விதத்தில் தேர்வினை முன் கூட்டியே நடத்தி முடிக்குமாறு பள்ளிக்கல்வி கமிஷனர், தேர்வுத்துறை இயக்குனருக்கு புகார் அனுப்பியுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News