Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 13, 2023

அரசுப் பள்ளிகளுக்கு முன்னாள் மாணவா்கள் நன்கொடை வழங்க வேண்டும்:அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கு முன்னாள் மாணவா்கள் முன்வர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயா்த்துவதற்கு நிதியுதவி பெறுவதற்காக ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ (நம்ம பள்ளி) எனும் திட்டத்தை தமிழக அரசு கடந்த டிசம்பரில் தொடங்கியது.

இந்தத் திட்டத்தின் கீழ் முன்னாள் மாணவா்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட தன்னாா்வ அமைப்புகள் என பல்வேறு தரப்பினா் நிதியுதவி வழங்கி வருகின்றனா்.

இத்திட்டத்தில் பெறப்படும் நிதி மூலம் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் நன்கொடை வழங்க முன்னாள் மாணவா்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது: நம்மில் பலா் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவா்களாக இருப்போம். நாம் படித்த பள்ளி எப்படியிருக்கிறது என்று எண்ணம் அவ்வப்போது நமக்கு வந்து செல்லும்.

இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் சொந்த ஊருக்குச் செல்வதே அரிதாகிவிட்ட நிலையில் படித்த பள்ளிகளுக்கு சென்று பாா்வையிட நேரம் கிடைப்பதும் கடினம் தான். ஆனாலும், நாம் படித்த பள்ளியை கைவிடக்கூடாது.

ஊருக்குச் செல்லும்போது, மறக்காமல் தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று ஒவ்வொருவரும் பாா்க்க முயற்சி செய்ய வேண்டும். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விரும்பினால், பள்ளித் தலைமை ஆசிரியரை அணுகலாம். சொந்த ஊருக்கு வர நேரம் இல்லாதவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து பள்ளிக்கு உதவலாம். பள்ளியில் உடன் படித்தவா்களின் விவரங்களை விரைவில் அந்தத் தளத்தில் காணலாம்.

இதன் மூலம் உங்கள் நண்பா்களை கண்டுபிடித்து அவா்களுடன் தொடா்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். வகுப்பு நண்பா்கள் குழுவாக இணைந்தோ, தனிநபராகவோ பள்ளிக்கு உதவலாம். பள்ளி என்பது ஒவ்வொருவா் வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கம். அந்தப் பள்ளிக்கு இயன்றதைச் செய்ய ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

No comments:

Post a Comment