JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, March 4, 2023

பதிவு மூப்பு ஆசிரியர்கள் பணி கோரி ஆர்ப்பாட்டம்

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தின்போது அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், 1,800 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 3,400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆசிரியர் நியமனங்கள் தகுதித்தேர்வு மூலமாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தி அதன் மூலம் நியமிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற பதிவு மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 500 பேர் நேற்று காலை 11 மணியளவில் சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டனர்.

தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலதலைவர் ரத்தினகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற தங்களுக்கு தகுதித்தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளித்து பணி வழங்குவது தொடர்பான அறிவிப்பை வரும் பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment