Monday, May 8, 2023

மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

மே 8: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிர்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2023, ஜூன் 1 முதல் 1300க்கும் மேல் தலைமையாசிரியர் காலி பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வித் துறையால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறை படுத்திட தலைமையாசிரியர் பணியிடங்கள் முக்கியமானது.

இந்நிலையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களிலிருந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்காமல் 8.5.2023 முதல் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஆண்டு கலந்தாய்வு நடத்துவது குறித்து கல்வித்துறை தெளிவு படுத்த வேண்டும்.

கொரோனா காலத்தில் கலந்தாய்வு நடத்தாததாலும் ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டதாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்காலம் முழுவதும் பதவி உயர்வு இல்லாமல் ஓய்வு பெற்று விட்டனர். ஜூன்.1 நிலவரப்படி உள்ள தலைமையாசிரியர் காலி பணியிடங்களுக்கு முதலில் இடமாறுதல் கலந்தாய்வு, அதனை தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு எந்த துறையிலும் இல்லாத அளவிற்கு கல்வி துறையில் ஆயிரக்கணக்கான வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News