Wednesday, June 28, 2023

'நீட்’ தேர்ச்சி பெற்றவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சிய இடங்கள் மாநில அரசுக்கு இருக்கிறது. அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எஞ்சியுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று (ஜூன் 28) தொடங்குகிறது. இன்று காலை 10 மணி முதல் ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நேற்று தெரிவித்துள்ளது. நீட் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கும். சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுக்கலந்தாய்வு ஆன்லைனிலும் நடைபெற உள்ளது.

நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மொத்தம் 10,385 இடங்கள் உள்ள நிலையில், ஒரு இடத்துக்கு 7 பேர் போட்டியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News