எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான, மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வில் சேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு, நாளை கடைசி நாளாக இருந்த நிலையில், கூடுதலாக இரண்டு நாட்கள் அவகாசத்தை நீட்டித்து, மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும், 12ம் தேதி மாலை 5:00 மணி வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
மருத்துவ படிப்புக்கு இதுவரை, அரசு ஒதுக்கீட்டுக்கு 21,514 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 9,398 பேர் என, 30,912 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, இரண்டு நாட்கள் கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக,விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். வரும், 17ம் தேதிக்கு பின், மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment