Sunday, September 10, 2023

துணை கலந்தாய்வில் 9,247 இடங்கள் நிரம்பின - பொறியியல் படிப்பில் 60 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வில் 9,247 இடங்கள் நிரம்பியுள்ளன. இந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.60லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் கடந்த ஜூலை 22 முதல் செப்டம்பர் 3-ம்தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின. இதையடுத்து எஞ்சியுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6-ல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் கலந்து கொள்ள 17,710 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், 11,221 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

இதையடுத்து தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் 10,279 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவற்றை உறுதி செய்த 377 அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட 9,247பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரங்களை /www.tneaonline.org/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து எஸ்சிஏ பிரிவு காலியிடங்களுக்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் (செப்டம்பர் 10, 11)நடைபெற உள்ளது இதற்கிடையேபொறியியல் கலந்தாய்வில் நடப்பாண்டு மொத்தம் உள்ள 1.60 லட்சம் இடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுமார் 60,000 இடங்கள் காலியாகிவிட்டன. அதேநேரம் கடந்தாண்டு பொறியியல் கலந்தாய்வில் 87,446இடங்கள் மட்டுமே நிரம்பின. அதனுடன் ஒப்பிடும்போது இந்தாண்டு சேர்க்கை உயர்ந்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News