JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, November 26, 2023

வங்கக் கடலில் நாளை புயல் சின்னம்: 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.27) புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 6 நாள்கள் தொடா்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.27) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் நவ.29-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

இதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிறு முதல் வெள்ளிக்கிழமை (நவ.26-டிச.1) வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறு 80, தரமணி 70 ம.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வங்கக் கடல் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.27) தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment