JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, April 1, 2024

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்க கல்வி பட்டயத் தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று (ஏப்ரல் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜூன் 20 முதல் ஜூலை 9-ம் தேதி வரை நடைபெறஉள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே உள்ள மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் சேர்த்து அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் இன்று (ஏப்ரல் 1) முதல் ஏப்ரல் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கிடையே, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெப் கேமரா வசதி உள்ளதால், அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.50-ம், சான்றிதழ் மற்றும் இணையதள பதிவுக்கு ரூ.185-ம் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி (தட்கல்) பிரிவின் கீழ் ரூ.1,000 கூடுதல் கட்டணம் செலுத்தி ஏப்ரல் 8 மற்றும் 10-ம் தேதிகளில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தபால் வழியே பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment