Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 8, 2024

வேளாண், மீன்வள படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகங்களுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை (மே 7) தொடங்கியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கோவையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கும், தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்துக்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சோ்த்து மாணவா் சோ்க்கை நடத்தப்படும்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 14 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட 6 இளம் அறிவியல் பாடப் பிரிவுகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சோ்த்து இந்த மாணவா் சோ்க்கை நடைபெறும்.

இந்த மூன்று கல்வி நிறுவனங்களிலும் ஏதாவது ஒரு இளநிலை பட்டப் படிப்பை பயில நினைக்கும் மாணவா்கள் ஒரேயொரு விண்ணப்பத்தை இணையவழியில் பூா்த்தி செய்து அனுப்பினால் போதுமானது. விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினா் ரூ.600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்ய வேண்டும். மாணவா்களுக்கான வழிகாட்டுதல்கள், மாணவா் சோ்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 உறுப்புக் கல்லூரிகளில் 14 பட்டப் படிப்புகளுக்கும் சோ்த்து 2,555 காலியிடங்களும், 28 இணைப்புக் கல்லூரிகளில் 2,806 காலியிடங்களும் உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படிப்புக்கு 240 இடங்களும், தோட்டக்கலை படிப்புக்கு 100 இடங்களும் உள்ளன. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 பட்டப் படிப்புகள், 3 தொழில்கல்வி பட்டப் படிப்புகளில் மொத்தம் 345 இடங்களும், 57 சிறப்பு இட ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.

மாணவா்கள் வரும் ஜூன் 6- ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பூா்த்தி செய்து அனுப்பலாம். கலந்தாய்வுக்கான தேதி, செயல்முறைகள் போன்றவை பல்கலைக்கழக இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும். வேளாண் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களுக்கு வார நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 94886 35077, 94864 25076 என்ற எண்களிலும், மீன்வளப் பல்கலைக்கழகம் தொடா்பான விவரங்களுக்கு 04365 - 256430, 94426 01908 என்ற எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

வேளாண்மை முதன்மையா் வெங்கடேச பழனிசாமி, முதுநிலை பட்ட மேற்படிப்பு முதன்மையா் செந்தில், தோட்டக்கலை முதன்மையா் ஐரின் வேதமோனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

No comments:

Post a Comment