Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகம் முழுவதும் புதிதாக நியமிக்கப்படவுள்ள 2,642 அரசு உதவி மருத்துவர்களுக்கான தகுதி பட்டியலில் இருந்து 400 மருத்துவர்களை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி நியமனம் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 2,642 அரசு உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் கடந்த ஜன.5 அன்று தேர்வு நடத்தியது.
அதன்படி தேர்வு முடிந்து தகுதியான மருத்துவர்களின் தகுதிப் பட்டியலை தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்பிறகு இதில் 400 பேர் கடந்த 2024ஜூலை 15-க்கு முன்பாக மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யவில்லை எனக்கூறி தகுதிப்பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்களை தேர்வு வாரியம் நீக்கியது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் பிரியதர்ஷினி, சாய் கணேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ‘‘கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதிக்கு முன்பாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தோம். மருத்துவ பல்கலைக்கழகம், சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் செய்ததால் உரிய நேரத்துக்குள் நிரந்தரப் பதிவு சான்றிதழைப் பெற முடியவில்லை. இதற்கு பல்கலைக்கழகம் தான் காரணம் என்பதால், எங்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்" எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.வேல்முருகன், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் பதிவு செய்திருந்தால் போதுமானது எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நிரந்தர பதிவு இல்லை எனக்கூறி இவர்களை நீக்கிவிட்டதாக வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம் புதிதாக நியமிக்கவுள்ள அரசு உதவி மருத்துவர்களுக்கு வழங்கும் பணி நியமன உத்தரவு இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி, இதுதொடர்பாக மருத்துவ தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (பிப்.26) தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment