Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 8, 2025

நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது - மார்ச் 7 வரை வரை விண்ணப்பிக்கலாம்!


இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்டிஏ (தேசிய தேர்வு முகமை) உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று (பிப்.7) மாலை முதல் தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் neet.nta.nic.in என்ற வலைத்தளம் வழியாக மார்ச் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.1700, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1600, எஸ்சி/ எஸ்டி பிரிவுக்கு ரூ.1000 என்றளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

இதற்கிடையே ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தகுதித்தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும். அதன் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும். மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என் என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment