Join THAMIZHKADAL WhatsApp Groups
பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சால்மோனெல்லா டைபிமுரியம் பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்பதால் மையோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஷவர்மா, தந்தூரி போன்ற உணவுகள் போன்றவற்றில் ஒரு முக்கிய சேர்க்கையாக மாறியுள்ளது முட்டையில் தயாரிக்கப்படும் மையோனைஸ்.
இதில், சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களால் மாசுப்படுவதுடன் இதன் மூலம் நோய்கள் பரவும் ஆபத்து அதிகயளவில் ஏற்பட்டுள்ளது.
மேலும், முட்டையில் செய்யப்படக்கூடிய மையோனைஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக அதிகமாக இருப்பதுடன் சில உணவகங்களில் மையோனைஸ் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 இன் பிரிவு 30(2) (எ)படி முட்டையில் இருந்து செய்யப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் மையோனைஸை உற்பத்தி செய்ய, சேமித்து வைத்து விநியோகம் செய்ய, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரவை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment