தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 4662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அறிவிப்பின்போது 3935 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது 727 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்தது.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று (அக்டோபர் 22) வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துக் கொள்வது என்பதை இப்போது பார்ப்போம்.
முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் ”12.07.2025 மு.ப நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - IV (தொகுதி – IV) பதவிகளுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளன” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் பதிவெண், பிறந்த தேதி மற்றும் கேப்சா குறியீடு கொடுத்து உள்நுழைய வேண்டும்.
இப்போது திரையில் உங்கள் தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும். அதில் உங்கள் பதிவு எண், தமிழ் தகுதித் தேர்வு மதிப்பெண், ஒட்டுமொத்த மதிப்பெண், பொது தரவரிசை நிலை, சாதிப்பிரிவு தரவரிசை நிலை போன்றவை காண்பிக்கப்படும். குறிப்பிட்ட பதவிகளுக்கான தனிப்பட்ட தரவரிசை நிலை தகுதியுள்ளவர்களுக்கு காண்பிக்கப்படும்.
அந்தப் பக்கத்தின் இறுதியில் உள்ள பிரிண்ட் என்பதை கிளிக் செய்து, உங்கள் தேர்வு முடிவுகளை எதிர்கால குறிப்புக்காக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.



No comments:
Post a Comment