THAMIZHKADAL TODAY NEWS

புதிய வருமான வரிச் சட்டம் அமல்: ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு

புதிய வருமான வரிச் சட்டம் 2025, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மசோதா நிறைவேற்றம்

64 ஆண்டுகால பழமையான வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கொண்டுவருதல், சட்டப் பிரிவுகளை எளிமைப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இந்த ஆண்டு புதிய வருமான வரி மசோதா-2025 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ள இந்தச் சட்டம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பொருளாதார விளைவுகள்

புதிய சட்டத்தின் மூலம், வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தனிநபர்களின் கைகளில் அதிகப் பணம் புழங்கும் என்றும், அவர்கள் பொருட்களை அதிகம் வாங்குவதால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) உயரும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க வரி மாற்றங்கள்

புதிய வருமான வரிச் சட்டத்தின் ஒரு பகுதியாக, சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) வரி அடுக்குகள் 4-லிருந்து 2 ஆகக் குறைக்கப்பட்டன. இந்த மாற்றம் செப்டம்பர் 22-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் 375 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது.

அதே சமயம், சிகரெட், பான்மசாலா, புகையிலைப் பொருட்கள் ஆகியவை மீது ஜி.எஸ்.டி.யுடன் கூடுதல் கலால் வரி விதிக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை மத்திய அரசு முடிவு செய்யும் தேதியில் அமலுக்கு வரும். அடுத்தகட்டமாக, சுங்க வரிகளை எளிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel